ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வாலிபர்கள் தொல்லை; பிளஸ்2 மாணவி தற்கொலை: அரியலூரில் உறவினர்கள் போராட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம், கடுகூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். விவசாயி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். 2வது மகளான பூஜா (16), அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(22). இவர், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அதற்கு உதவி செய்யுமாறும் பூஜாவுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். இதனை பூஜா நிராகரித்துள்ளார். இது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் வேல்முருகனின் உறவினர்கள், வேலாயுதம் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது மகள் பூஜாவையும் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் படுகாயத்துடன் இரண்டு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவி பூஜா, கயர்லாபாத் காவல்நிலையம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகம், மத்திய மண்டல ஐஜி அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார். தகவல் தெரிந்த வேல்முருகன், தனது நண்பர்கள் சிலருக்கு பூஜாவின் செல்போன் எண்ணை கொடுத்து அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பூஜா, நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்துள்ளார். தந்தை உடனடியாக அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பூஜா பரிதாபமாக இறந்தார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மகள் உயிரிழந்ததாகவும், வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பூஜாவின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை அருகில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த அரியலூர் போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து கடுகூர் கிராமத்தை சேர்ந்த 17, 18 வயது வாலிபர்கள் மற்றும் கதிரவன் (21) ஆகிய 3 பேரை நேற்று மாலை கைது செய்தனர். தலைமறைவான வேல்முருகனை தேடி வருகின்றனர்.

Related Stories: