சென்னை : இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீலாதுன் நபி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள் நாயகம் அவர்கள் இளம் பருவத்தில் துயர்மிகு சூழலில் வளர்ந்திருந்தாலும் , வாய்மையுடன் இறுதிவரை தனித்துவம் மிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்.
ஏழை, எளிய மக்களுக்கு உணவு அளியுங்கள் என்று கருணை உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர், தனியாத இரக்கமும், அன்பும் அரவணைப்பும் கொண்டவர்.உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது போதனைகளும் , அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள்.
அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைபிடித்து வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் பால் எப்போதும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் , மக்களால் அமையப்பெற்ற கழக அரசுக்கும் இருக்கும். உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியர் சமுதாய பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.