பாஸ்டன்: ‘பல ஆண்டுகளாக பிரச்னைகள் தீர்க்கப்படாத நாடுகளுக்காக வாய் திறக்காமல் இருக்கும் ஐநா, உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற உலக அமைப்புகளில் உடனடி சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்,’ என அமெரிக்காவில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குரல் கொடுத்துள்ளார். வாஷிங்டனில் நடக்கும் உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருவார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நாடுகளில் கூட வெவ்வேறு காலகட்டங்களில் மாற்றங்கள், சீர்த்திருத்தங்கள் நடக்கின்றன. ஆனால், ஐநா, உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற உலக அமைப்புகள் பல்லாண்டு காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரி நீடிக்கின்றன. இத்தகைய அமைப்புகள் அதிக வெளிப்படைத்தன்மையுடன், பிரதிநிதித்துவத்துடன், போதுமான பிரதிநிதிகள் இல்லாத நாடுகளுக்காகவும் பேசக்கூடிய அமைப்புகளாக இருக்க வேண்டியது அவசியம். அத்தகைய மாற்றம் உடனடியாக நடக்க வேண்டும் என்பதே எனது கருத்து. ஆப்ரிக்காவின் பல நாடுகள், பசிபிக் தீவுகளை வளர்ச்சி இன்னமும் சென்றடையவில்லை. அந்தந்த நாடுகளுக்கும் வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் நிறைய உள்ளன. எனவே, உலக அமைப்புகளில் உடனடியாக மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.