காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் நிலம் மீட்பு: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடி நடவடிக்கை

சென்னை: கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் நிலம்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன்  முன்னிலையில் கையகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் இதுவரை 132 கிரவுண்ட் இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி உள்ளது.

இன்று ரூ.250 கோடி மதிப்பிலான 38 கிரவுண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலங்கள் அனைத்தும் முறையாக 78 பேருக்கு நோட்டீஸ் கொடுத்து நிலம் கையகப்படுத்தி உள்ளோம். அறநிலையத்துறையில் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பதிவேடுத்துறை ஆரம்பித்தோம். இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால் தொலைபேசி எண்ணை அறிவித்தோம். அதன் மூலம்,  இதுவரை 4500 குறைகள் வந்துள்ளது.

இந்த குறைகள் தொடர்பாக மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம், விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எச்.ராஜாவின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் இந்து சமய அறநிலையத்துறை கருத்தில் கொள்ளாது. எதையோ பார்த்து ஏதோ குறைக்கிறது என்பது போல் நினைத்துக்கொள்வோம். எச்.ராஜா  மத்திய அரசின் பிரதிநிதி அல்ல. சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வழிபாட்டிற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விஜயதசமி அன்று கோயில் திறப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். திருநீர் மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மற்ற கோயில்களில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: