நாகை சூர்யாநகர் சுனாமிகுடியிருப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும்-கலெக்டரிடம் கோரிக்கை மனு

நாகை : கடந்த 15 ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த நிலையில் உள்ள நாகை சூர்யாநகர் சுனாமி குடியிருப்பு வீடுகளை சீரமைத்து தர கோரி நாகை கலெக்டர் அருண்தம்புராஜிடம் அப்பகுதி பொதுமக்கள் நேற்று மனு கொடுத்தனர்.நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாகை சூர்யாநகர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சுனாமியால் பாதித்த எங்களுக்கு கடந்த 2005ம் ஆண்டு 60 வீடுகள் நாகை சூர்யா நகரில் கட்டி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த வீடு பராமரிப்பு செய்யப்படவே இல்லை. பட்டாவும் இல்லை.

இந்நிலையில் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் முகப்பு பகுதிகள் என ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு காயம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெய்யும் மழையால் சந்தானலட்சுமி என்பவரின் வீட்டின் முகப்பு பகுதி பெயர்ந்து விழுந்து காலில் காயம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி விட்டது.

இதனால் எங்கள் குடியிருப்புகள் மேலும் பாதிப்படையும். கடந்த 15 ஆண்டு காலமாக எங்கள் வீடுகளை பராமரிப்பு செய்து குடியிருப்போர் பெயரில் பட்டா வழங்ககோரி மனு கொடுத்து வருகிறோம். ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் நகராட்சியில் கேட்டால் நகராட்சியில் போதிய நிதி இல்லை. எனவே நீங்களே உங்களது வீடுகளை பராமரிப்பு செய்து கொள்ளுங்கள் அல்லது கலெக்டரை தொடர்பு கொண்டு வீடுகளை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுத்து கொள்ளுங்கள் என தெரிவிக்கின்றார். எனவே நாகை சூர்யாநகர் சுனாமி குடியிருப்பு வீடுகளை பராமரிப்பு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

138 மனுக்கள் குவிந்தது

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொதுமக்கள் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 138 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67 ஆயிரத்து 500க்கான வங்கிக் கடன் மானியத்தையும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது. டிஆர்ஓ ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் ராஜன், துணை கலெக்டர் (பயிற்சி) சௌமியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: