சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலத்தை நிறைவு செய்த சசிகலா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். அதன் பின்னர், அறிக்கை, நலம் விசாரிப்பு என்று செயல்பட்டவர், திடீரென முடங்கினார். இந்தநிலையில், விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள் என சசிகலா அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லோரும் அதிமுக பிள்ளைகள் தான். புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்கமாட்டார். இவர்களா, அவர்களா என்றெல்லாம் பார்க்கமாட்டார். அதனையெல்லாம் பார்த்துத்தான் வளர்ந்து வந்திருக்கிறோம்.