நேரடி அரசியலில் மீண்டும் சசிகலா: திடீர் அறிவிப்பால் பரபரப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலத்தை நிறைவு செய்த சசிகலா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். அதன் பின்னர், அறிக்கை, நலம் விசாரிப்பு என்று செயல்பட்டவர், திடீரென முடங்கினார். இந்தநிலையில், விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள் என சசிகலா அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லோரும் அதிமுக பிள்ளைகள் தான். புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்கமாட்டார். இவர்களா, அவர்களா என்றெல்லாம் பார்க்கமாட்டார். அதனையெல்லாம் பார்த்துத்தான் வளர்ந்து வந்திருக்கிறோம்.

என்னை பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் நம் பிள்ளைகள் தான். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.இவ்வாறு கூறியுள்ளார். சசிகலா வரும் 16ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்தநிலையில், சசிகலாவின் இந்த திடீர் அறிவிப்பு தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: