வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதம்: தொடர்ந்து 2வது நாளாக போக்குவரத்து பாதிப்பு

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் திடீர்  வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதமடைந்ததால் 2வது நாளாக ஊத்துக்கோட்டை - திருவள்ளூர்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே பிச்சாட்டூர், நாகலாபுரம், நந்தனம் ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால்,  ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து  மழைநீர் ஆரணியாற்றில் கலந்தது.  இதனால் ஆரணியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே ஆரணியாற்றின் குறுக்கே  ரூ.27 கோடியில் புதிய பாலம் கட்டப்படுவதால், அதன் அருகில் தற்காலிகமாக மாற்று தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

ஆற்றில் வந்த மழைநீரால் பாலத்தின் மையப்பகுதியில் போடப்பட்ட ராட்சத பைப்புகள் நடுவில் ஓட்டை விழுந்தது.  இதனால் நேற்று முன்தினம் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  தகவலறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தற்காலிக பாலத்தை சீரமைத்தனர். பின்னர் மற்றொரு இடத்திலும் பாலம் சேதமடைந்தது. இதனிடையே பாலத்தில்  சீரமைப்பு பணிகள்  தொடங்கியது. தற்போது, புதியபாலத்தில் தற்காலிகமாக பைக் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து,  தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தரைப்பாலம் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதனால் இப்பகுதியில் 2வது நாளாக நேற்றும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: