14 வயதுக்கு குறைவானவர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை-மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

காரைக்குடி : வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்கு குறைவானவர்களை வேலைக்கு அமத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ஜார்ஜ் எச்சரித்தார். காரைக்குடி பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட், வெல்டிங் கடைகள், ரஸ்க்  தயாரிப்பு நிறுவனங்கள், கண்ணன் பஜார், ஜவுளி கடைகள் மற்றும் ரெடிமேட் கடைகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ஜார்ஜ் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்ககள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தொழிலாளர் நலத்துறையினர், சைல்ட் லைன் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்கு பின்னர் சைமன்ஜார்ஜ் கூறுகையில், ‘‘விழாக்காலம் நெருங்கி வருவதால் குழந்தைகள் ஜவுளி கடைகள் உள்பட மற்ற வர்த்தக நிறுவனங்களில் ஈடுபடுத்தப்படாமல் தடுக்க ஆய்வு செய்தோம். இதில் 14 வயதுக்கு குறைவானவர்கள் யாரும் மீட்கப்படவில்லை. 14வயதுக்கு மேல் 7 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களை முறைப்படுத்தப்பட்ட தொழிலில் மட்டும் ஈடுபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தவிர 14வயதுக்கு குறைவான குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.’’ என்றார்.

Related Stories: