தூத்துக்குடி: மாலத்தீவு அருகே கடலில் ஆபத்தில் சிக்கிய தோணியில் இருந்து தூத்துக்குடியை சேர்ந்த 9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் இருந்து கடந்த 2ம் தேதி அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வெண்ணிலா என்ற தோணியில் காய்கனிகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு 9 தொழிலாளர்கள் மாலத்தீவை நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 130 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படகு மூழ்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உடனடியாக அப்படகில் இருந்த அவசர நிலை தொலைத்தொடர்பு சாதனம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து படகின் உரிமையாளர் மற்றும் அதில் பயணித்த 9 பேரின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து கனிமொழி எம்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் இருந்த அவர் உடனடியாக மத்திய அமைச்சகத்தை தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.