திருச்சியில் பரபரப்பு சுடுகாட்டில் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் பூஜை

திருச்சி: சுடுகாட்டில் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் பூஜை நடத்தியது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், மணிகண்டம் குடிசைமாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். தொழிலாளியான இவர், கடந்த 4ம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதில் அவரது உடல் இறுதி சடங்குக்காக அரியமங்கலத்தில் உள்ள மதநல்லிணக்க மயானத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது காசியில் பயிற்சி பெற்று அரியமங்கலத்தில் ஜெய் அகோரி, காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வரும் மணிகண்டன்(எ) பீடி மணிகண்டன்(எ)அகோரி மணிகண்டன், தனது சிஷ்ய அகோரிகளுடன் உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு மயானத்தில் கூடியிருந்தார்.

மயானத்தில் வெங்கடேசனின் குடும்பத்தினர் இறுதி சடங்கை செய்து முடித்தனர். அதன்பிறகு வெங்கடேஷ் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரி மணிகண்டன் மந்திரங்கள் ஜெபித்து ஆன்மசாந்தி பூஜை செய்தார். அப்போது சக அகோரிகள் மேளம் அடித்தும், சங்கொலி எழுப்பியும் பூஜையில் ஈடுபட்டனர். இறந்த வெங்கடேஷ், ஏற்கனவே அகோரி மணிகண்டனிடம் சிஷ்யராக இருந்துள்ளார். இதன் காரணமாகவே அவரது குடும்பத்தினரின் அனுமதியோடு ஆன்மசாந்தி பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories: