கேப் டிரைவருடன் சண்டை நடிகை சஞ்சனா மீது போலீசில் புகார்

சென்னை: நடிகை சஞ்சனா கல்ராணி மீது கேப் டிரைவர் போலீசில் புகார் அளித்தார். தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணி. கன்னட நடிகையான இவர், போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். பல மாதம் சிறையில் இருந்த இவர், சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இந்திரா நகரிலிருந்து ஆர்ஆர் நகருக்கு செல்ல கேப் ஒன்றை புக் செய்தார். கார் சென்றுகொண்டிருந்தபோது, ஏசி இல்லை என்று டிரைவரிடம் சஞ்சனா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டிரைவருக்கும் சஞ்சனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் டிரைவரை சஞ்சனா திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து டிரைவர் சூசைமணி போலீசில் புகார் அளித்தார். அதில், ‘சஞ்சனாவுடன் மேலும் 3 பேர் காரில் பயணித்தனர். காரில் ஏசி இருந்தது. ஆனால் ஏசி இல்லை எனக்கூறி சஞ்சனா என்னுடன் தகராறில் ஈடுபட்டார். என்னை தரக்குறைவாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: