திருப்பூர் குமரன் 118வது பிறந்தநாள் விழா-அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

திருப்பூர் : திருப்பூர் குமரனின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திருப்பூர் குமரனின் 118வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள குமரன் சிலைக்கு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியதாவது: திருப்பூர் குமரனின் 118வது பிறந்தநாளான இன்று (நேற்று) அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடுமலைப்பேட்டை தளியில், சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் திருவுருவச் சிலை அமைக்கப்பட உள்ளது.

மேலும், கீழ் பவானி பாசனம் உருவாக காரணமாக இருந்தவரும், சுதந்திர போராட்டத்தின் போது 11 ஆண்டுகள் சிறையில் இருந்த ஈஸ்வரனுக்கு அரங்கம் மற்றும் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார், என்றார். இவ்விழாவில், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ், மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி, வடக்கு தாசில்தார் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: