தொடுதலை உணரச் செய்யும் ஆய்வுக்காக 2 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: வெப்பநிலை மற்றும் தொடுதலை உணரச் செய்யும் ஆய்வுக்காக அமெரிக்க விஞ்ஞானிகள் ஜூலியஸ், பட்டாபவுடியன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2021ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாபவுடியன் ஆகியோர் இந்த பரிசை கூட்டாக பெறுகின்றனர். இவர்கள் மனித உடல் தொடுதலின் மூலம் வெப்பநிலையை எவ்வாறு உணர்கிறது என்ற ஆய்வை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். நரம்பியல் மண்டலத்தின் உணர்திறன் தொடர்பான ஆய்வுக்காக இந்த பரிசு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாள்பட்ட வியாதிகள், வலிகளுக்கான சிகிச்சை முறைகள் பெரும் முன்னேற்றத்தை அடையும் என நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.ஏற்கனவே ஜூலியன், பட்டாபவுடியன் இருவரும் நியூரோசயின்சுக்கான காவ்லி விருதை பெற்றுள்ளனர். இவர்களுக்கு நோபல் விருதுடன் ரூ.8 கோடி பரிசாக வழங்கப்படும்.

Related Stories: