பென்னாகரம்: ஒகேனக்கல்லில் விடுமுறை தினத்தையொட்டி திரளான சுற்றுலா பயணிகள் திரண்டனர். பரிசலில் சென்று உற்சாகமடைந்தனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்றால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில், நீர் நிலைகள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல அரசு வழிகாட்டுதல்களுடன் அனுமதி வழங்கியது. இதையொட்டி கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதலே திரளான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.