ஒகேனக்கல்லில் திரண்ட சுற்றுலா பயணிகள்: பரிசலில் சென்று உற்சாகம்

பென்னாகரம்: ஒகேனக்கல்லில் விடுமுறை தினத்தையொட்டி திரளான சுற்றுலா பயணிகள் திரண்டனர். பரிசலில் சென்று உற்சாகமடைந்தனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்றால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில், நீர் நிலைகள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல அரசு வழிகாட்டுதல்களுடன் அனுமதி வழங்கியது. இதையொட்டி கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதலே திரளான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

மெயினருவியில் குளித்தும். மாமரத்து கடவு பரிசல் துறையில் இருந்து பரிசலில் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு களித்தனர். காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், அனைத்து கடைகளில் வியாபாரம் படு ஜோராக நடந்தது. மசாஜ் தொழிலாளர்கள், மீன் விற்பனையாளர்கள், சமையல் செய்பவர்கள் என பல தரப்பில் நேற்று வருவாய் கிடைத்தது. தற்போது புரட்டாசி 3 வது வாரம் என்பதால், மீன் விற்பனை சற்று டல் அடித்தது. இன்றும் விற்பனை குறைவாக இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திளரான சுற்றுலா பயணிகள் வந்திருந்ததால் ஒகேனக்கல் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இன்றும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள் மற்றும் மசாஜ் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: