வேலூர்: தமிழகத்தில் சாலைமறியல், ஆர்பாட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளின் போது அங்கு முதலில் காவலர்கள் சென்று பாதுகாப்பு கொடுப்பதோடு, சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். அதோடு, அப்பகுதியை அமைதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதுபோன்ற சமயங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார் சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாவதும், போலீசார் பிரச்னைக்குரிய நபர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதில் உண்மை நிலை சில நேரங்களில் மறைக்கப்படுகிறது. எனவே, ஆர்பாட்டம், சாலை மறியல், வாகன சோதனை உள்ளிட்ட பிரச்னைகளின் போது, சம்பவ இடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் படம் பிடித்து காட்டும் விதமாக காலர் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கேமரா முதன் முதலாக சென்னை, கோவை போலீசாருக்கு வழங்கப்பட்டது. இந்த கேமராக்களை போலீசார் தங்களது தோள்பட்டையில் பொருத்திக்கொண்டு பிரச்னைக்குரிய இடங்களில் சென்று வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தும்போது, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் உண்மை மாறாமல் படம் பிடித்துக்கொள்ளும்.