தானா சேர்ந்த கூட்டம் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ததை எதிர்த்த மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜன் அவரது மனைவி சாந்தி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் சூர்யா நடித்த படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார். இது ஒப்பந்தத்திற்கு முரணானது. எனவே, இந்த படத்தை தெலுங்கில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஞானவேல்ராஜா, இயக்குனர் விக்னேஷ் சிவன் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட ஞானவேல்ராஜாவுக்கு உரிமை உள்ளது என்று வாதிட்டார்.   சாந்தி தியாகராஜன் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய ஞானவேல்ராஜாவுக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, தானா சேர்ந்த கூட்டம் படத்தை தெலுங்கு டப்பிங் செய்ய ஞானவேல்ராஜாவுக்கு முழு உரிமை உள்ளது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: