ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் விளையும் முருங்கை காய்கள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் நல்ல விலை இருந்தும் வரத்து இல்லாததால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திம்மரசநாயக்கனூர், சிலுக்குவார்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கை விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு விளையும் முருங்கைக்காய்கள் தரத்திலும், ருசியிலும் மேம்பட்டு இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஆண்டிப்பட்டி பகுதியில் வந்து முகாமிட்டு முருங்கைக்காய்களை வாங்கி செல்கின்றனர். மேலும் இங்கு விளையும் முருங்கைக்காய்கள் குளிரூட்டு நிலையங்களில் வைக்காமலேயே ஒருவாரத்திற்கு கெட்டு போகாமல் இருப்பதால் ஆண்டிப்பட்டி காய்களுக்கு மார்க்கெட்டில் எப்போதும் மவுசு இருக்கும். ஆண்டிப்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, கொம்புக்காரன்புலியூர் பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட லாரிகளில் முருங்கைக்காய்கள் டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர சில வெளிநாடுகளுக்கும் ஆண்டிப்பட்டி முருங்கை ஏற்றுமதி செய்யப்படுகிறது.