அபிராமம் புறவழி சாலையை தரம் உயர்த்தி சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் வேண்டுகோள்

சாயல்குடி : போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அபிராமம் புறவழி சாலையை தரம் உயர்த்தி சீரமைக்க வேண்டும் என 15க்கும் கிராம மக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில் 5ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. வளர்ந்து வரும் நகரமாக விளங்குகிறது. இதனை சுற்றி நத்தம், கண்ணத்தான், மேலக்கொடுமலூர், ஆனைச்சேரி, தட்டனேந்தல், நெடியமாணிக்கம், மணலூர், வைத்தியனேந்தல், கீரனூர், செல்வநாயகபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொடர்ச்சியான கிராமங்களும். இந்த வழித்தட பாதையை வீரசோழன், நரிக்குடி, பார்த்திபனூர் வரை சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை போன்று முதுகுளத்தூர், தேரிருவேலி, கடலாடியை சேர்ந்தவர்கள் மதுரை செல்வதற்கு அபிராமம் வழித்தடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். சுற்று வட்டார கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட எவ்வித பொருட்கள் வாங்கவும், மேல்நிலைக்கல்வி, மருத்துவ உதவி போன்றவற்றிற்கு அபிராமம் வந்து செல்கின்றனர். மேலக்கொடுமலூரில் பிரசித்தி பெற்ற முருகன்கோயில் உள்ளது. இங்கு வெள்ளி, செவ்வாய் மற்றும் விஷேச காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் உடையநாதபுரம் முதல் அபிராமம் பஸ் ஸ்டாண்ட் வரை ஒருவழி பாதையாக இருப்பதால், அபிராமம் கடை தெருவிற்குள் இரண்டு வாகனங்கள் எதிர், எதிரே விலகி செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நடந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கண்ணத்தான் வழியாக அபிராமம், பார்த்திபனூர் சந்திப்பு சாலை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இந்த சாலையும் போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இந்த ஒருவழிச்சாலையை இருவழிச்சாலையாக தரம் உயர்த்தி புதியதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: