கரூர் மாவட்டத்தில் கிராம மக்கள் 100 நாள் வேலைக்கு செல்வதால் விவசாய தொழில் அடியோடு பாதிப்பு

கரூர்: கரூர் மாவட்டத்தில் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்கு செல்வதால் விவசாய பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கிராமங்களில் வேலைவாய்ப்பு இல்லாத பெண்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பணி செய்யும் பெண்கள் குளங்கள் பராமரித்தல், ரோடுகளை செப்பனிட்டுதல், மரக்கன்று நடுதல், குளங்கள் தூர் வாருதல் மற்றும் குடிமராமத்து பணிகள் செய்து வருகின்றனர். குறிப்பாக 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் தான் கிராமங்களில் விவசாயம் தொடர்பான களை எடுத்தல், விதை ஊன்றுதல், விளைந்த காய்கறிகளை பறித்தல், நீர்ப்பாசனம் செய்தல் ஆகிய பணிகள் செய்து வந்தனர்.

இவ்வாறு பணிகள் செய்யும் பெண்களுக்கு தினக்கூலியாக இடத்திற்கு தக்கவாறு ரூ.150 முதல் 200 வரை தினசரி கூலியாக வழங்கப்பட்டது. இந்த பணிக்கு செல்பவர்கள் கட்டாயம் 8 மணி நேரம் பணி செய்வார்கள். ஆனால் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள் 8மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலகு அடிப்படையில் வேலை நிர்ணயிக்கப்படும். குறிப்பிட்ட அளவு வேலை செய்தால் மட்டுமே அரசு வழங்கும் முழுமையான சம்பளத் தொகை ரூ. 250 வழங்கப்படும்.

ஆனால் விவசாய பணியோடு ஒப்பிடும்போது 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப் பழு குறைவாக இருப்பதால் விவசாய வேலைக்கு செல்லாமல் அனைவரும் 100 நாள் வேலைக்கு செல்வதையே விரும்புகின்றனர். இதனால் கிராமத்தில் விவசாயிகளுக்கு களை எடுத்தல், நாற்று நடுதல் ஆகிய பணிக்கு கூலி பெண்கள் வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பதிவு செய்துள்ளனர். எனவே 100 நாள் படி தொடர்பான வேலையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: