மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், நேற்று முதல் முறையாக 60,000 புள்ளிகளை கடந்தது. கடந்த ஜனவரி 21ம் தேதி 50,000 புள்ளிகளை கடந்த இது, 8 மாதங்களிலேயே 10,000 புள்ளிகள் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் கடந்த 1990 ஜூலை 25ம் தேதி முதன் முறையாக 1000 புள்ளிகளை தொட்டது. அதன்பிறகு 2007 அக்டோபர் 29ல் 20,000 புள்ளிகளையும், 2015 மார்ச் 4ம் தேதி 30,000 புள்ளிகளையும், 2019 மே 23ம் தேதி 40,000 புள்ளிகளையும் கடந்தது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை ஏற்றம் இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு தொடர வாய்ப்பு உள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.