காஞ்சிபுரம் அருகே கடனை கட்ட சொல்லி தனியார் நிறுவன ஊழியர்கள் நெருக்கடி? மாற்றுத்திறனாளி விவசாயி தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் மாற்று திறனாளி விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் விவசாயம் செய்வதற்காக நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கடனை செலுத்துவதாக ஒப்பந்தம் போட்டு டிராக்டர் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அவருடைய மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தவணை கட்டுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் 3 மாதங்களாக கடன் தவணை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று மிகவும் தரக்குறைவாக பேசியதாக ஊர்மக்கள் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மனோகரன் நிதி நிறுவன வாசலில் வந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அந்த பகுதியில் இருந்த மக்கள் மனோகரனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்திருந்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக வாலாஜாபாத் காவல் நிலையத்தில் உயிரிழந்த மனோகரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனியார் நிதி நிறுவனம் வைத்துள்ள அமர்நாத், கிருஷ்ணா, சரத்குமார், கார்த்திக் ஆகிய 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராமமக்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதே தற்கொலைக்கு காரணம் என்று உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

Related Stories: