சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, அனைத்து பிராந்திய மொழிகளிலும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வெளியிடப்படும் : மத்திய அரசு!!

சென்னை : சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, அனைத்து பிராந்திய மொழிகளிலும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு அது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் மீனவர் நல சங்கம் அமைப்பின் தலைவர் தியாகராஜன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “ சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, ஏப்.11/2020-ல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.அதேபோல இதன் மீது கருத்துக்களை தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என பூவிலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை அக்டோபர் 21ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் அது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. வரைவு அறிக்கை குறித்த கருத்து கேட்பு விரிவாக நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து,கருத்து கேட்பு விரிவாக நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: