புதுச்சேரியில் 27ம் தேதி பந்த் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்

புதுச்சேரி : புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 299 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய பாஜக அரசு 12 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்துள்ளனர். வரும் 27ம் தேதி நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறைகூவல் விடுத்துள்ளது.

அதனை ஏற்று புதுச்சேரியிலும் வருகிற 27ம் தேதி பாரத் பந்த்தை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்துள்ளோம்.

பந்த் அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 12 இடங்களில் மறியல் நடத்தப்படும். இதில் தொழிலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக 23ம் தேதி கிராமப்புறங்களிலும், 24, 25ம் தேதி நகர்ப்பகுதிகளிலும் பந்த் போராட்ட விளக்க பிரசார பொதுக்கூட்டம் நடத்தப்படும். பந்த்திற்கு மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர்கள், ஆட்டோ,  பேருந்து, டெம்போ ஓட்டுனர்கள், உரிமையாளர்கள், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள்,  தொழிற்சாலைகள், திரையரங்குகள், மீனவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள்,  பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பந்த்திற்கு ஆதரவு தர  கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது எல்எல்எப், ஐஎன்டியூசி, சிஐடியு, எம்எல்எப், ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக பந்த் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

Related Stories: