வால்பாறை: வால்பாறையில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வீட்டை உடைத்து சூறையாடியது. தொழிலாளி குடும்பத்தினர் கூரையில் ஏறி உயிர் தப்பினர். வால்பாறை வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உணவு தேடி எஸ்டேட், குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகிறது. நேற்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய 6 யானைகள், 2 ஆக பிரிந்து, வால்பாறையை அடுத்த முக்கோட்டு முடி எஸ்டேட்டிற்குள் 3 யானைகள் புகுந்தது. தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைகள், உணவு தேடி முக்கன் என்பவர் வீட்டை இடிக்க தொடங்கியது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் முக்கன் மகள், மருமகன், பேத்தி உள்ளிட்ட 6 பேர் கூரையில் ஏறி உயிர் தப்பினர்.