4 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொன்ற 7, 8-ம் வகுப்பு மாணவர்கள்: சிவகாசி அருகே விளையாட்டு விபரீதமானது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன் (30). பட்டாசு ஆலை வேன் டிரைவர். இவருக்கு தீனதயாளன் (வயது 4) என்ற மகன் உள்ளான். நேற்றுமுன்தினம் மாலை பக்கத்து வீட்டு மணலில் விளையாடிக் கொண்டிருந்த தீனதயாளனை திடீரென காணவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, பார்த்திபன் கொடுத்த புகாரின்பேரில், சிவகாசி டவுன் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் தீனதயாளனை பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மூதாட்டியின் 2 பேரன்கள், அழைத்துக் கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. இதனைதொடர்ந்து 2 சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பக்கத்து வீட்டில் உள்ள மூதாட்டி வீட்டில் கட்டிட பணி நடந்து வருகிறது. அந்த மணலில் தீனதயாளன் விளையாடியுள்ளான். இதை அந்த வீட்டில் உள்ள மூதாட்டி கண்டித்துள்ளார். உடனே, சிறுவனின் தந்தை பார்த்திபன் வந்து கேள்வி கேட்கவே மூதாட்டியுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது, மூதாட்டியின் 13 வயது மற்றும் 11 வயது பேரன்கள் பார்த்து ஆத்திரம் அடைந்தனர்.

சண்டை முடிந்த சில நிமிடங்களில் சிறுவனை மிட்டாய் வாங்கி தருவதாககூறி மூதாட்டியின் பேரன்கள் அழைத்து சென்றனர். வழியில், பாட்டியுடன் தகராறுக்கு நீதானே காரணம் எனக்கூறி சிறுவனை கிணற்றில் தள்ளி விட்டு கொன்றது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து,  2 சிறுவர்களையும் டவுன் போலீசார் நேற்று கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். பின்னர், அதிகாலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அருகில் உள்ள கிணற்றில் இருந்து தீனதயாளன் உடல் மீட்கப்பட்டது. இவ்வழக்கில் கைதான இருவரும் முறையே 8, 7ம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: