கொடநாடு கொலை வழக்கில் வாளையார் மனோஜிற்கு தளர்வுடன் நிபந்தனை ஜாமீன்: ஊட்டி நீதிமன்றம் வழங்கியது

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் வாளையார் மனோஜிற்கு நிபந்தனை ஜாமீனில் மேலும் தளர்வு அளித்து ஊட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஊட்டி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, சயான் நிபந்தனை ஜாமீன் பெற்றுக் கொண்டு வெளியில் வந்தார். ஆனால், வாளையார் மனோஜிற்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த இருவர் ஜாமீன் வழங்க முன் வரவில்லை. இதனால், அவரால் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஜாமீனில் தளர்வு அளிக்க வேண்டும் என ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, வாளையார் மனோஜிற்கு கேரள மாநிலத்தை சேர்ந்த இருவர் ஜாமீன் வழங்கலாம். அவர்கள் இருவரும் ரத்த உறவுகளாக இருத்தல் வேண்டும். அவர்கள் சொத்து மதிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: