டெல்லி : வங்கக்கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு ஒடிசாவில் கரையை கடந்த நிலையில், அந்த மாநிலத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது.ஒடிசா நோக்கி நகர்ந்த அந்த தாழ்வு மண்டலம், தீவிரம் அடைந்து வடக்கு ஒடிசாவின் கடற்கரையில் அதிகாலை கரையை கடந்தது.
இதன் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தற்போதே ஒடிசாவின் பல்வேறு நகரங்களில் பெய்து வரும் மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.இதே போல மராட்டியத்தில் அவுரங்காபாத் சுற்று வட்டாரத்தில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அந்த மாநில அமைச்சர் அப்துல் சத்தார் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனிடையே மும்பை, தானே, பால்கர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.