பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் 500 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கியது: அதிகாரிகள் தகவல்

புழல்:  மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் 500 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கியது. மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது. இந்த அனல் மின்நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக, இந்த அனல் மின் நிலையத்தில், மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இம்மாதம் 1ம் தேதி 2வது அலகில், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, டர்பன், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் மேற்பார்வையில், ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். நேற்று முன்தினம், 2வது அலகில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. இதையடுத்து, 2வது அலகில் நேற்று காலை முதல் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது. இந்த தகவலை, அனல் மின்நிலைய உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: