குருவாயூர் கோயில் வாசல் வரை மோகன்லால் காரை அனுமதித்த கோயில் ஊழியர்கள் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: தடையை மீறி குருவாயூர் கோயில் வாசல் வரை பிரபல நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்த, கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரசித்தி பெற்ற குருவாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது, அவருடைய கார் கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்களை கோயில் நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories: