மகன் கையால் மாங்கல்யம் பெற்று பேராசிரியை மறுமணம்: திருமங்கலத்தில் நெகிழ்ச்சி

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் ஓவியர் ஆதிஷ் (30). திரைப்படத்துறையில் பணிபுரிந்து வருகிறார். தென்காசியை சேர்ந்தவர் சுபாஷினி (28). ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, விவாகரத்து ஆகியுள்ளது. இவரது மகன் தர்ஷன் (9). ஆதிஷ்சும், சுபாஷினியும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் சம்மதத்துடன் முடிவு செய்தனர். அம்மாவின் மறுமணத்திற்கு மகன் தர்ஷன் பரிபூரண சம்மதம் தந்தான்.

இதனை தொடர்ந்து மாப்பிள்ளையின் சொந்த ஊரான மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இங்குள்ள பெருமாள் கோயிலில் உறவினர்கள் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் சுபாஷினியின் மகன் தர்ஷன் திருமாங்கல்யத்தை எடுத்து கொடுக்க, மணமகன் ஆதிஷ், மணமகள் கழுத்தில் கட்டினார். தொடர்ந்து மாலை மாற்றி மெட்டி அணிந்து கொண்டார் மணமகள். பின்னர் தந்தை பெரியார் படத்தின் முன்பும் தம்பதியினர் மாலை மாற்றி கொண்டனர். இந்த திருமண வீடியோ, படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: