ஐகோர்ட் மதுரை கிளைக்கான அரசு வக்கீல்கள் நியமனத்தை விரைந்து முடிக்க கோரி வழக்கு

மதுரை: அரசு வக்கீல்கள் நியமனங்களை விரைந்து முடிக்க கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அச்சாணியை சேர்ந்த ரமேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஐகோர்ட் மதுரை கிளையில், தினசரி சுமார் 2 ஆயிரம் வழக்குகள் பட்டியலிடப்படுகிறது. கடந்த ஜூன் 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ஐகோர்ட் கிளைக்கு சேர்த்து, 44 அரசு வக்கீல் மட்டுமே தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். 202 பேர் நியமிக்கப்பட வேண்டும்.

இதனால் வழக்கு விசாரணை பாதிக்கிறது. எனவே, ஐகோர்ட் மதுரை கிளைக்கான அரசு வக்கீல் நியமனத்தை விரைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பான பணிகள் நடந்து வருகிறது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, டிச. 23க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: