ஒன்றிய அரசு சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்ட தேர்வை தமிழில் நடத்தக்கோரி வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் பகுதியை  சேர்ந்த தீரன் என்ற திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு: மாணவர்களின் அடிப்படை  அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும்விதமாக, ஒன்றிய  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்டம்( கேவிபிஒய்) தேர்வு, இந்தி  மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. 11ம் வகுப்பு முதல் இளங்கலை முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், முனைவர் படிப்புக்கு செல்லும் வரை, அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

 இந்த தேர்வு, தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும். தாய்மொழியில் கல்வி கற்பதாலேயே மாணவர்கள் எளிதில் அறிவியல் உள்ளிட்ட அம்சங்களை புரிந்து கொள்ள முடியும். இது போன்ற காரணங்களால்,  அறிவியல்  ஆர்வம் கொண்ட அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள்  மிகவும் பாதிக்கப்படுவர். எனவே, கேவிபிஒய் தேர்வை,  அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும். தமிழகத்தில்   தேர்வு மையங்களை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனுவை நீதிபதிகள் துரைசுவாமி,  முரளிசங்கர் ஆகியோர் நேற்று விசாரித்து, ”மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர், கேவிபிஒய் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: