இளைஞர்கள் அதிகம் மது அருந்துவதால் பிரச்னை இனி மது அருந்த மாட்டோம் என பிரமாண பத்திரம் தந்தால் ஜாமீன்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: இனி மது அருந்த மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்கப்படும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர், நண்பர்களுடன் ஒன்றாக மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘அதிகளவிலான இளைஞர்கள் மது அருந்துவதால் தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த இரு இளைஞர்களுக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த வழக்கே வந்திருக்காது. எனவே, மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்கப்படும்’’ என்றார்.  இதை ஏற்பதாக மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து மனு மீதான விசாரணையை செப்.14க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: