பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை-கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமய விழாக்களின் போது, கடைப்பிடிக்க வேண்டிய அரசின் விதிமுறைகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்பேசியதாவது:தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. எனவே, பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபராக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதிக்கப் படுகிறது. தனி நபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு ஆர்டிஓ  இளவரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: