நாமக்கல் : நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமய விழாக்களின் போது, கடைப்பிடிக்க வேண்டிய அரசின் விதிமுறைகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்பேசியதாவது:தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. எனவே, பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.