ஆழியார் பூங்கா செல்ல தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு உள்ளூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். ஆழியாருக்கு வரும் பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு பின், பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.

இதனால், கடந்த சில வாரமாக, சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, வரும் 15ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 2 நாட்கள், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஆழியார் அணைப்பகுதி மற்றும் பூங்கா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, தடை விதிக்கப்பட்டது. அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி பொழுதை கழிக்கலாம் என உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அணைப்பகுதி மற்றும் பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடையால், அப்பகுதியில் பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. மேலும், ஆழியார் போலீஸ் ஸ்டேஷன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு தடையை மீறி ஆழியாருக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டதுடன், விதிமீறி செல்பவர்கள் குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: