ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்: கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னையில் எஸ்.டி.பி.ஐ.கட்சி ஒருங்கிணைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், பஷீர் சுல்தான், மாவட்ட தலைவர்கள் இஸ்மாயில், ஹுசைன், ரஷீத், சீனி முகமது, சலீம், பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், பாப்புலர் ப்ரண்ட் மாநில செயலாளர் நாகூர் மீரான், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில், என்.சி.ஹெச்.ஆர்.ஓ. தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பச்சைத் தமிழகம் கட்சி துணைத் தலைவர் அருள்தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்று பேசிய தலைவர்கள், ‘ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அமைந்து விடாத வகையிலும், சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரிலேயே கொள்கை தீர்மானம் நிறைவேற்றி சிறப்புச் சட்டம் இயற்றி, ஆலையை நிரந்தரமாக அகற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: