சென்னை: வஉசி பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்த்துள்ள முதல்வருக்கு, பாராட்டுகளை தெரிவிப்பதாக தலைவர்கள் கூறினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வ.உ.சி.யின் 150வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான அறிவிப்புகளை செய்திருக்கிறார். தூத்துக்குடியில் மேல பெரிய காட்டன் சாலை இனி ‘வ.உ.சிதம்பரனார் சாலை’ என்று அழைக்கப்படும். வ.உ.சி.யின் முழு உருவச் சிலை, கோவை வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்படும், ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. வாழ்ந்த நினைவு இல்லமும் திருநெல்வேலியில் உள்ள சிதம்பரனார் மணிமண்டபமும் புதுப்பிக்கப்பட்டு, ஒளி, ஒலி காட்சி அமைக்கப்படும். இவ்வாறு 14 அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். வ.உ.சி.யின் புகழை உலகு அறியச் செய்து இருக்கிறார்.