போளூர் : போளூரில் பெய்த கனமழை காரணமாக அரசு பெண்கள் பள்ளி வளாகம் ேசறும், சகதியுமான மாறியுள்ளதால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 1,400 மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டாக மூடப்பட்டிருந்த பள்ளி நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. 95 சதவீத மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்திருந்தனர்.
இந்நிலையில், போளூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அதேபோல், நேற்று அதிகாலையும் கனமழை பெய்தது. 56.4 மி.மீ மழை அளவு பதிவானது.
இந்த கனமழை காரணமாக போளூர் அரசு பெண்கள் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கியது. தலைமை ஆசிரியர் அறைக்கு பின்புறம் உள்ள வகுப்பறைக்கு செல்லும் வழி முழுவதும் மழைநீர் சூழ்ந்தது.இதேபோல், மெயின் பில்டிங் அருகே கொடிகம்பம் அமைந்துள்ள பள்ளி மைதானத்திலும் மழைநீர் தேங்கி பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக வடிந்தது. ஆனாலும், மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி மாணவிகள் வழுக்கி விழும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.மழை பெய்வது தொடர்ந்தால் பள்ளியில் மழைநீர் தேங்குவது மேலும் அதிகரிக்கும். எனவே, மாணவிகள் நலன் கருதி சேறும், சகதியுமாக மாறியுள்ள பள்ளி வளாகத்தை உடனடியாக சீரமைத்து மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.