திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று மாலை உறியடி உற்சவம் நடைபெற்றது. உறியடி உற்சவத்திற்காக நேற்று காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. நம்பெருமாள் எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 7.30 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்தார். பின்னர் மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சிவிகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு கருடமண்டபத்திற்கு மாலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.