சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் 76,59,720 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டது. இதேபோல், 9 மாவட்டங்களில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் ஆகியோருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் பதிவு அலுவலர் மூலம் பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் போன்ற தேவையான மாற்றங்களை செய்துகொண்டனர். இந்தநிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்காக தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல்களில் 19.3.2021 அன்று வெளியிடப்பட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தயாரித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் நேற்று வெளியிடப்பட்டது.