சென்னை : ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பாரதிதாசன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் கீழ் செயல்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் கடந்த அதிமுக ஆட்சியின் போது, பிரிக்கப்பட்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதற்காக அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக சட்டத்தில்
திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் மேற்கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை நீக்கம் செய்வதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.