செப்டம்பர் 1 முதல் பள்ளிக்கல்லூரி மாணவர்கள் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: செப்.1 முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள் வரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்பைடையில், பள்ளி மற்றும் அரசு கல்லூரிகள் வரும் 01.09.2021 முதல் திறக்கப்பட உள்ளது.

எனவே, 2021-22 கல்வியாண்டில், மாணவர்/மாணவியர்களுக்கான கட்டணமில்லா பேருந்து  பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ / மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: