கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே 300 ஆண்டுகள் பழமையான கோயில் பனைமரத்தை பக்தர்கள் வணங்கி சென்று வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே தொல்காப்பியக்குடி கிராமம் உள்ளது. இங்கு பிரம்மசக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பிரம்மசக்தி அம்மன் பிள்ளையார், முருகன், ஏழு கன்னிகைகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் தனி சன்னதியில் உள்ளன. இங்கு தனி சன்னிதியாக உள்ள வீரன் சன்னிதிக்கு அருகாமையில் ஒரு பனை மரம் உள்ளது. மிகவும் நீண்டு வளர்ந்து உயர்ந்துள்ள இந்த பனைமரம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. மிக உயரமான இந்த பனை மரத்திலிருந்து விழும் பனை மட்டைகள் இதுவரை யார் மீதும் எந்த விலங்குகள் மீதும் விழுந்தது கிடையாது. எந்த வேகமான மற்றும் பலத்த காற்றிலும் இந்த பனை மரம் பாதிக்கவில்லை. பனை மரத்தடியில் வீரன் சன்னதியில் இருந்து வரும் தகர கொட்டகையிலும் இதுவரை இந்த மரத்தின் மட்டைகள் விழுந்தது கிடையாது என்கின்றனர் இப்பகுதி பக்தர்கள்.