திருட வந்த வீட்டில் ‘கொர்ர்ர்’ திருடனுக்கு விழுந்தது தர்மஅடி

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பட்டாபி சீதாராமன் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (55). இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் கதவை திறந்து வெளியே கழிவறை சென்றார். பின்பு கதவை பூட்டாமல் மீண்டும் வீட்டிற்குள் வந்து படுத்துவிட்டார். அப்போது வீட்டிற்குள்  மர்மநபர் புகுந்துவிட்டார். பீரோ சாவி கிடைக்காததால் அசதியில் அப்படியே படுத்து தூங்கிவிட்டார். குறட்டை சத்தம் கேட்டு உஷாரான லட்சுமி, லைட்டை போட்டார். அப்போது, திடுக்கிட்டு எழுந்த திருடன் லட்சுமியை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினான். உடனே லட்சுமி ‘‘திருடன் திருடன்’’ என கூச்சலிட்டார். உடனே பொதுமக்கள் அவனை விரட்டி சென்று மடக்கி, தர்மஅடி கொடுத்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். தகவலறிந்து பரமக்குடி நகர் போலீசார் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சுடலைபழம் (50) என தெரியவந்தது. அன்று இரவு ஏற்கனவே இரண்டு இடங்களில் திருடிவிட்டு லட்சுமி வீட்டிற்கு வந்துள்ளான். அங்கு அசதியில் தூங்கிவிட்டான். அவனை கைது செய்து  ரூ.20 ஆயிரம் மற்றும் மூன்று பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: