உள்ளாட்சி தேர்தல் திமுக காஞ்சி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்: காஞ்சிபுரம் எம்பி பங்கேற்பு

மாமல்லபுரம். மாமல்லபுரம் அடுத்த மணமை, வடகடம்பாடி ஆகிய இரு ஊராட்களில் திமுக காஞ்சி வடக்கு மாவட்ட, திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் எம்பி., ஜி. செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து மறைந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் வழியில் தமிழகத்தை ஆட்சி செய்து வரும் முதல்வர் 100 நாட்களை கடந்து ஒரு துடிப்பான தலைவராக செயல்பட்டு, பம்பரம் போல் சுற்றி தேர்தலுக்கு முன்பு சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக பூர்த்தி செய்து வருகிறார்.

மேலும், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை எப்படி கொடுத்தீர்களோ, அதேபோல் வரவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிகப்படியான வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். இதில், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கே. இப்ராஹிம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஜெய்மார்த்தாண்டம், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஞானபிரகாசம், திருக்கழுக்குன்றம் அவை தலைவர் நல்லூர் ஜெயராமன், பேரூர் செயலாளர் யுவராஜ், பச்சையப்பன், கோபால், சுகுமாறன், செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: