மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை ஒன்றிய அரசு துரிதப்படுத்தி, 3 ஆண்டில் முடிக்கும் என நம்புவதாக ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இன்னும் கட்டுமானப்பணிகள் துவங்கவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழக மக்கள் மட்டுமின்றி, கேரள மாநில மக்களும் பயன் பெறுவர். மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு கூடுதல் இடமும் கிடைக்கும். கொரோனா காலத்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை இருந்திருந்தால், குறைவான கட்டணத்தில் தரமான மருத்துவ சிகிச்சை கிடைத்திருக்கும். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை தாமதமின்றி ஒதுக்கவும், பணியை துரிதப்படுத்தி, விரைந்து முடிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.