முத்துப்பேட்டை அருகே நிலைதடுமாறிய கார் வாய்க்காலில் பாய்ந்தது: டிரைவர் உயிர் தப்பினார்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே நிலைதடுமாறிய கார் வாய்க்காலில் பாய்ந்தது. டிரைவர் உயிர் தப்பினார். கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கோட்டகம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை புதுக்கோட்டையிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று நிலைதடுமாறி ஓவரூர் சாலை செல்லும் பகுதியில் உள்ள சாலையோர வாய்க்காலில் பாய்ந்தது.

இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த ரமேஷ்(38) என்பவர் சுதாரித்து உடனடியாக காரிலிருந்து வெளியேறி காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் கிரேன் மூலம் காரை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: