திருச்சுழி: திருச்சுழி அருகே கண்டெடுக்கப்பட்ட 13ம் நூற்றாண்டு கற்சிலைகளை, அதிகாரிகள் எடுத்து செல்ல விடாமல் கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மிதலை குளத்தை சேர்ந்தவர் சாமி கிழவன். இவர் தனது தரிசு நிலத்தை கடந்த சில நாட்களாக ஜேசிபி மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் சுமார் 2 அடி உயரமுள்ள பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகிய 3 சிலைகள் இருந்தன. பின்னர் கிராம மக்கள் சிலைகளை அங்கேயே சுத்தம் செய்து, அபிஷேகம் செய்து வழிபட துவங்கினர். தகவலறிந்து திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணன், விருதுநகர் அருங்காட்சியகம் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள், இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் ஆகியோர் நேற்று வந்து சிலைகளை பார்த்தனர்.