அண்ணா பல்கலைக்கு துணைவேந்தர் 10 பேரிடம் நேர்காணல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் நேற்று முடிவடைந்தது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவை தமிழக ஆளுநர் நியமித்து உத்தரவிட்டார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் இறுதி செய்யப்பட்டனர். அந்த வகையில் 10 நபர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களிடம்  தேடுதல் குழு நேற்று காணொலி காட்சி வாயிலாக நேர்காணல் நடத்தி முடித்துள்ளது. 10 நபர்களுள்  3 நபர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு தமிழக ஆளுநரிடம் வழங்கப்படும். மூன்று நபர்களிலிருந்து தகுதியான நபரை தமிழக ஆளுநர் தேர்ந்தெடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக நியமனம் செய்வார்.

Related Stories: