முட்டைகோஸ் நடவு பணிகள் தீவிரம்

ஊட்டி: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் முட்டைகோஸ் நாற்று நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தோட்டக்கலை மாவட்டமான நீலகிரியில் சுமார் 7600 ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இதில், கேரட் அதிக பரப்பளவில் பயிரிடப்படுகின்றன. இதுதவிர, உருளைகிழங்கு, பீட்ரூட், பூண்டு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.  இந்த சூழலில், கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவகாற்றின் தீவிரம் காரணமாக நல்ல மழை பெய்தது. கேத்தி பாலாடா, கோலனிமட்டம், முத்தோரை பாலாடா, கப்பத்தொரை உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கின.

இதனால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்யவில்லை. மேகமூட்டமான காலநிலை மட்டுமே நிலவி வருகிறது. இதனால், விவசாயிகள் தற்போது மீண்டும் விவசாய பணிகளை துவக்கி உள்ளனர். ஊட்டி அருகேயுள்ள தேனாடுகம்பை, புதுமந்து, கடநாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 2 மாத பயிரான முட்டை கோஸ் நாற்றுகளை நடவு செய்யும் பணிகளை துவங்கி உள்ளனர்.

Related Stories: